கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம்
அசுரர்களால் சித்ரவதைக்கு உள்ளாகி, சிறைவாசம் அனுபவித்த தேவர்களை காக்க அவதரித்தவர், சிவமைந்தன் முருகப்பெருமான்.
அசுரர்களுடன் போரிட்டு வென்று, அவர்களின் தலைவனான சூரபதுமனை சம்ஹாரம் செய்து, தேவர்களை ஆட்கொண்டார். ஆணவத்தின் உருவமாக விளங்கிய சூரபதுமனை சம்ஹாரம் செய்தாலும், அவனின் ஒரு பாகத்தை மயிலாகவும், மறுபாகத்தை சேவற்கொடியாகவும் மாற்றி முருகப்பெருமான் தன்னோடு வைத்துக் கொண்டார்.
சூரபதுமனுடன் கந்தக்கடவுள் போரிட்டதாக கருதப்படும் திருச்செந்தூரில், ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில், கந்தசஷ்டி விழா மிகவும் முக்கியமானது. சூரபதுமனுடன் சுவாமி போரிட்டு வெல்லும் நிகழ்ச்சியே சஷ்டி விழாவாக கொண்டாப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 12-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர்.
சுவாமி ஜெயந்தி நாதர்
விழா நாட்களில் தினமும் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
5-ம் திருநாளான நேற்று மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று, சூரசம்ஹாரம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். தொடர்ந்து கடற்கரையில் சுவாமி, சூரபதுமனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின்னர் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.
#முருகாசரணம்
#முருகாசரணம்
No comments:
Post a Comment