Tuesday, December 22, 2015

                                                             ஓம் முருகா சரணம் !

இன்று கார்த்திகை நட்சத்திரம் கூடிய நன்னாளில் சங்கரன் மகன் கந்தப் பெருமானை வணங்குவோம்...
ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும்,
நம்பினோர்க்கு அருளும் முருகா...
நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்.... அதை
நான் கண்டு மகிழவேண்டும்....
ஊமைக் குழந்தையாம் குமர குருபரன் நாவில்
உயர்ந்த வேல் கொண்டு எழுதி
உணர்வினில் அமுதூறும் கந்தர் கலி வெண்பாவை
உவந்து அளித்த தமிழ்க் கடவுளே!
நக்கீரன் நாவிலே ஆற்றுப்படை பாட
நல்ல தமிழ் தந்த முருகா
நாள்தோறும் உன்புகழைப் பாடிட பாடிட, அதை
நீ கேட்டு மகிழ்ந்த முருகா!
இன்று தாய் இவள் கண்ணீரும் தந்தையின் ரத்தமும்
தன் நெஞ்சம் காண விலையோ?
இங்கு தவழாத பிள்ளையைத் தவழ வைத்தால்..
நீ தந்த தமிழுக்குப் பெருமை முருகா!
வேலோடும் மயிலோடும் விரைந்தோடி வா
விளையாடும் இளம்பிள்ளை பிணி தீர்க்க வா
எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!
எந்தவுரு கொண்டேனும் குறை தீர்க்க வா!
விரைந்தோடி வா வா வா
பிணி தீர்க்க வா வா வா!
செந்தூரில் வா வா வா!
குறை தீர்க்க வா வா வா!

Sunday, December 13, 2015

அருள்மிகு கொளஞ்சியப்பர். திருக்கோயில் மணவாளநல்லூர். விருத்தாசலம்.









அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 


மூலவர் : கொளஞ்சியப்பர் 
உற்சவர் : கொளஞ்சியப்பர் 
தல விருட்சம் : கொளஞ்சிமரம் 
தீர்த்தம் : மணிமுத்தாறு 
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் 
ஊர் : மணவாளநல்லூர், விருத்தாசலம் 
மாவட்டம் : கடலூர் 
மாநிலம் : தமிழ்நாடு 

திறக்கும் நேரம்: காலை 6 முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.


பொது தகவல்:

கொளஞ்சியப்பரின் வலப்பாகத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்மிகு சித்தி விநாயகர் பெரிய திருமேனி கொண்டு காட்சி தருகிறார். இருவருக்கும் தனித்தனி விமானங்கள். 

கொளஞ்சியப்பர் விநாயகர் சந்நிதிகளுக்கு எதிரில் வேட்டைக்கு தயாரான நிலையில் அலங்கரிக்கப்பட்ட இரண்டு பெரிய குதிரைகள் நிற்கின்றன. குதிரைச் சிலைகள் கண்ணையும் கருத்தையும் கவரும் கம்பீரத் தோற்றம் உடையவை. கோயிலின் பின்பக்கமாக இடும்பன், கடம்பன் ஆகியோருக்கு தனிக்கோயில் இருக்கின்றன. சுவாமி சந்நிதிக்கு எதிரில் மகா மண்டபத்தை ஒட்டி சற்றே இடப்பக்கத்தில் முனியப்பர் சந்நிதி உள்ளது.

முனியப்பருக்கு எதிரில் கல்லிலும், இரும்பிலும் வடிக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான சூலங்கள் மேல் நோக்கி நெருக்கமாக நாட்டப்பெற்றுள்ளன. இவற்றை அடுத்துச் சற்றே கிழக்கில் வீரனார் காட்சி தருகிறார். 

பிரார்த்தனை :
பிராது கட்டுதல் :தம் குறை முடிக்க வேண்டி, பிராது கட்டுதல் என்ற நேர்த்தி கடன் இங்கே மிகவும் புதுமையாக உள்ளது.பொருள் களவு போய்விட்டலோ கொடுத்த கடன் திரும்பாவிட்டாலோ, பிறர் தம்மை வஞ்சித்து விட்டலோ, கடும் நோயால் அவதி உற்றாலோ , குடும்பப் பிரச்சினைகளால் வாடினாலோ, மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் தடைபட்டாலோ, வேலை கிடைக்காது, வறுமை உற்றாலோ, வேறு யாதொன்று வேண்டி நின்றாலோ, யாவற்றையும் இங்கே பிராது கட்டி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

எவ்வாறு பிராது கட்டுதல் ?

பிராது வாசகத்தை ஒரு வெள்ளைத் தாளில் கீழ்க்கண்டவாறு எழுதவேண்டும். மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு..... என ஆரம்பித்து தான் எந்த ஊரிலிருந்து வருகிறேன் என்றும்,தன்னுடைய கோரிக்கை இன்ன என்றும் தெளிவாக எழுதி கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் கொடுத்தால் அவர் அதை கொளஞ்சியப்பர் காலடியில் வைத்து அர்ச்சனை செய்து பின்பு விபூதி பொட்டலம் ஆக்கி தருவார். அதை சிறுநூலால் கட்டி முனியப்பர் சந்நிதியில் இருக்கும் வேலில் கட்டித் தொங்க விட்டுவிட்டு விடைபெறலாம். 

இப்படி வேண்டிக்கொண்ட 90 நாட்களில் பிராது கட்டியவரின் எண்ணம் ஈடேறும். எந்த ஊரிலிருந்து வருகிறோமோ அங்கிருந்து கிலோ மீட்டருக்கு 10 காசு வீதம் படிப்பணம் கட்டி வழிபட வேண்டும்.

ராஜினாமா கட்டணம்: கோரிக்கை நிறைவேறினால் இந்த தேதியில் நான் வந்து வைத்த கோரிக்கை நிறைவேறியதால் அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என ராஜினாமா கட்டணம் செலுத்தி நேர்த்திகடனை செலுத்தலாம்.

குழந்தை வரம், கடன் தொல்லை,திருடு போன பொருள், ஏமாற்றப்பட்ட பணம், வேலை மாறுதல், குடும்ப கஷ்டம்,பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் போன்றவற்றுக்காக இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

ஆடு மாடு கோழி தானம், எடைக்கு எடை நாணயம் வழங்கல், முடி எடுத்தல், பால்குடம் எடுத்தல்,ஆகியவை இங்கு விசேசம். பங்குனி உத்திரத்திற்கு காவடி எடுத்தல் இங்கு விசேசம். உடலெங்கும் அலகு குத்தி வருதல் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி. உண்டியலில் பொன்தாலி, குண்டு, வெள்ளியில் பரு முதலியன நீங்கப்பெற்றவர்கள் அதன் வடிவில் செய்து வழங்கும் பரு உருண்டை, கண்ணடக்கம், மனிதர் கை, கால், வயிறு, மார்பு வடிவில் செய்யப்பெற்ற வெள்ளி உடல் உறுப்புகள், தொட்டிலில் கிடக்கும் குழந்தை வடிவங்கள் யாவும் நேர்த்திகடன்களாக செலுத்தப்படுகின்றன.கருவறை பின்பக்கம் வேப்பமரம் மற்றும் அரச மரங்களில் குழந்தை உறங்குவது போல் ஒரு கல் வைத்துச் சிறு ஏணைகள் கட்டித் தொங்க விட்டுப் பிள்ளை வரம் வேண்டுதலும் உண்டு. தொட்டில் கட்டுதல், பூஜைமணி வாங்கி வைத்தல், விளக்குகள் வாங்கி வழங்குதல் ஆகிவற்றையும் பக்தர்கள் செய்கின்றனர்.நெல் , கம்பு, கேழ்வரகு ,சோளம், மணிலா,உளுந்து, பயிறு கொள்ளு, நவதானியங்கள்,மஞ்சள்ல முந்திரி, கனிவகைகள், பலா, வாழை, மா அனைத்து வகைக் காய்கறிகள், பசுமாடுகள், காளைகள், எருமை, கன்றுகள், ஆடுகள், கோழிகள் என பக்தர்கள் நேர்த்திகடன்களாக செலுத்துகின்றனர்.வசதியுள்ள பக்தர்கள் தாமே உணவு தயாரித்து படையல் இட்டு நைவேதனம் செய்து மற்றவர்களுக்கும் அன்னதானமும் வழங்குகிறார்கள்

தலபெருமை:
சுவாமி சுயம்பு மூர்த்தி என்ற பெருமை பெற்றவர். உருவத்திருமேனி கொண்டவர் அல்லர். கண்ணுக்குப் புலப்படா அருவத்திருமேனியினரும் அல்லர். உருவமும் - அருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்ட ஒரு பீடத்தின் வடிவில் இங்கே காட்சி தருபவர். பலிபீட சொரூபமாக இருந்து முருகன் அருள்பாலிக்கிறார்.3 அடி உயரம் கொண்ட சுயம்பு பலி பீட பிரதிஷ்டையே மூலஸ்தானம். கருங்கற்பீடத்தின் கீழே முருகனது சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்கரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அபிசேக ஆராதனைகள் யாவும் பீட வடிவில் திகழும் முருகப்பெருமானுக்கே நிகழ்த்தப் பெறுகின்றன. வேப்பெண்ணெய் மருந்து : வேப்பெண்ணெயை பக்தர்கள் வாங்கிக் கொண்டு போய் கொளஞ்சியப்பர் சந்நிதியில் வழங்க அர்ச்சகர் அதனை இறைவன் பாதத்தில் வைத்து வழிபாடாற்றி ஐயன் அருள் மருந்தாகிய விபூதியைச் சிறிது அந்த எண்ணெயில் இட்டு வழங்குகிறார். தீட்டுத் தடங்கல் இல்லாது நீராடித் தூய்மையாக இருந்து இவ்வெண்ணெயை பெற்றுத் தடவினால் தீராத பல புறநோய்கள் எல்லாம் குணமாகி விடுகின்றன. ஆறாத புண்கள் கட்டிகள் முதுகுப்பக்க பிளவைகள் முதலிய நோய்களுக்கும் மாடுகளின் கழுத்தில் வரும் காமாலைக்கட்டிகளுக்கும் கொளஞ்சியப்பர் அருள் கலந்த இவ் வெண்ணெய் கைகண்ட மருந்தாக விளங்கி வருகிறது.இவ்வெண்ணெய் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது. குழந்தைக்கு காப்பிடுதல் : பிறந்த 90 நாட்கள் கழித்து குழந்தைக்கு பெயரிடுதல், சட்டை நகை போடுதல் இங்கு ரொம்பவும் விசேசம்.குழந்தை பிறந்ததிலிருந்து இங்கு வரும்வரைக்கும் குழந்தைக்கு சட்டை போட மாட்டார்கள்,பொட்டு கூட வைக்க மாட்டார்கள்.இந்த சந்நிதிக்கு வந்த பின்னரே குழந்தைக்கு சட்டை போட்டு பொட்டு வைக்கிறார்கள். 

தல வரலாறு:

தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) பகுதிக்கு வந்தார். இங்குள்ள பழமலைநாதர் கோயிலில் சிவபெருமான், , விருத்தாம்பிகையுடன் அருள் செய்கிறார். "விருத்தம்' என்றால் "பழமை' என்று பொருள். இந்த ஊர், கோயில் எல்லாமே மிகப்பழமை வாய்ந்தவை. பல யுகம் கண்ட கோயில் என்பதால், வாலிப வயதினரான சுந்தரருக்கு இத்தலத்து இறைவனையும், அம்பிகையையும் பாடுவதற்கு தனக்கு தகுதியில்லை எனக்கருதி, அவர்களை வணங்கிவிட்டு, பாடாமல் சென்று விட்டார். சுந்தரரின் பாடல்கள் என்றால் இறைவனுக்கு மிகவும் விருப்பம். அம்பாளுக்கும் அதே விருப்பம் இருந்தது. உடனே சிவன், முருகனை அழைத்தார். முருகன் வேடுவ வடிவம் எடுத்து, சுந்தரரிடம் சென்று, அவரிடமிருந்த பொன்னையும் பொருளையும் அபகரித்தார். இறைப்பணிக்கான பொருளை தன்னிடம் திருப்பித்தந்து விடு என சுந்தரர் வேடுவனிடம் கெஞ்சவே, அதை திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி சொல்லிவிட்டு மறைந்து விட்டார். இறைவன் செயலால் இப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொண்ட சுந்தரர், திருமுதுகுன்றம் வந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, பாடல் பாடி, இழந்ததை பெற்று சென்றார். சுந்தரரை வழிமறித்து வேடுவராக வந்த முருகப்பெருமானே திருமுதுகுன்றத்தின் மேற்கே சுயம்புமூர்த்தியாக தோன்றி சுந்தரருக்கு அருள்பாலிக்கிறார். முருகன் தோன்றிய இடத்தில் "குளஞ்சி' எனப்படும் மரங்கள் சூழ்ந்திருந்ததால் இவர் "குளஞ்சியப்பர்' எனப் பெயர் பெற்றார். காலப்போக்கில் "கொளஞ்சியப்பர்' என திரிந்தது.

Tuesday, November 17, 2015

கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம்
அசுரர்களால் சித்ரவதைக்கு உள்ளாகி, சிறைவாசம் அனுபவித்த தேவர்களை காக்க அவதரித்தவர், சிவமைந்தன் முருகப்பெருமான்.
அசுரர்களுடன் போரிட்டு வென்று, அவர்களின் தலைவனான சூரபதுமனை சம்ஹாரம் செய்து, தேவர்களை ஆட்கொண்டார். ஆணவத்தின் உருவமாக விளங்கிய சூரபதுமனை சம்ஹாரம் செய்தாலும், அவனின் ஒரு பாகத்தை மயிலாகவும், மறுபாகத்தை சேவற்கொடியாகவும் மாற்றி முருகப்பெருமான் தன்னோடு வைத்துக் கொண்டார்.
சூரபதுமனுடன் கந்தக்கடவுள் போரிட்டதாக கருதப்படும் திருச்செந்தூரில், ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில், கந்தசஷ்டி விழா மிகவும் முக்கியமானது. சூரபதுமனுடன் சுவாமி போரிட்டு வெல்லும் நிகழ்ச்சியே சஷ்டி விழாவாக கொண்டாப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 12-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர்.
சுவாமி ஜெயந்தி நாதர்
விழா நாட்களில் தினமும் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
5-ம் திருநாளான நேற்று மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று, சூரசம்ஹாரம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். தொடர்ந்து கடற்கரையில் சுவாமி, சூரபதுமனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின்னர் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.
‪#‎முருகாசரணம்‬

Thursday, November 12, 2015

                                        கந்த சஷ்டி விரதம்


கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை
பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி
கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சி
பூர்வமானது. ஒருசமயம் அவர் கடும் வயிற்று
வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ
சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று
வலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப்
போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து
கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.
அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா
ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய
சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த
திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம்
மாறினார்.
திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை
எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர்,
முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம்
இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர்
கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு,
கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில்
அமர்ந்தார்.
அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள்
புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும்
திறனையும் அவருக்கு அளித்தார்.
அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள்
மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து
ஓடியது.
சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்…
என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான
சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்.
அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின்
பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி,
சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.
6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள்
இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த
வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.
கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை
முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல்
புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த
பரவசம் ஆனார்.
அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி
தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள்
யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு
தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும்
கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள்
கொண்டது சஷ்டி கவசம்.
பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த
சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார்.
அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும்
இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட
வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம்.
இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம்
போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது
குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி.
இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது.
அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில்
தொடங்கி,
ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை
நிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப்
பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை
வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப்
பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்
பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின்
ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம்,
சத்ரு போன்றவற்றை குறிக்கும்.
இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும்
வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.
அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர்
திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5
அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய
சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும்
பாராயணம் செய்வது நல்லது.
சஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி
கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால்
நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப்
பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,
நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள்,
குழந்தை பாக்கியம் கிட்டும்…. இப்படி பல பலன்கள்
கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்
பட்டுள்ளது.


Tuesday, October 13, 2015

பாலும் பழம் உண்டு ... பக்திக்குப் பொருள் உண்டு
தேனும் தினை உண்டு ... தித்திக்கும் தமிழ் உண்டு
ஞானப் பழம் உண்டு ... பழனிமலை மேலே
வேலன் அருள் உண்டு ... வேண்டுவோர் மனம் போல
வேலன் துணை வருவான் ... நாளும் அருள் புரிவான்
வேலுண்டு மயிலுண்டு ... வினை தீர்க்க வழி உண்டு
வேலவன் அருள் உண்டு ... வேண்டிடும் அடியார்க்கு
... வேலன் துணை வருவான்
கூவும் குயில் உண்டு ... குதூகலம் பல உண்டு
தாவும் மான் உண்டு ... மோகனக் கிளி உண்டு
மாலைப் பொழுதினிலே ... சோலை அழகினிலே
மாலை நில வொளியில் ... பன்னிரு கையோடு
வேலன் துணை வருவான் ... நாளும் அருள் புரிவான்
சந்தனம் மணம் வீசும் ... ஷண்முக நதி உண்டு
சான்றோர்கள் நீராடும் ... சரவணப் பொய்கை உண்டு
சுந்திர வடிவேலன் ... சிங்கார மயில் ஏரி
அன்பர்கள் குறை தீர்க்க ... அருள் என்னும் பொருள் தந்து
வேலன் துணை வருவான் ... நாளும் அருள் புரிவான்
வேலுண்டு மயிலுண்டு ... வினை தீர்க்க வழி உண்டு
வேலவன் அருள் உண்டு ... வேண்டிடும் அடியார்க்கு
... வேலன் துணை வருவான்
... நாளும் அருள் புரிவான்.

Monday, October 12, 2015

மருவும் அடியார்கள், மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!
மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர் காமப் பெருமாள் காண்!!

முத்தான முத்துக் குமரா ... முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக் குமரா ... சிந்தை மகிழ வா வா வா
நீ ஆடும் அழகைக் கண்டு ... வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு ... மயிலாடி மகிழுதையா
மயிலாடும் அழகைக் கண்டு ... மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு ... மக்கள் கூட்டம் ஆடுதையா
பன்னீரில் குளிக்கவைத்து ... பட்டாடை உடுத்திவைத்து
சந்தனத்தில் சாந்தெடுத்து ... அங்கமெல்லாம் பூசிவைத்து
நீர்ப்பூசி திலகம் வைத்து ... நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலரால் உன்னை ... அர்ச்சிப்போம் வருவாய் அப்பா...

Friday, October 9, 2015

பால் மணக்குது ... பழம் மணக்குது ... பழனி மலையிலே...
பாரைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
பழனி மலையைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே ... அப்பப்பா
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே
எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே
தேன் இருக்குது ... தினை இருக்குது ... தென் பழனியிலே
முருகா
தேன் இருக்குது ... தினை இருக்குது ... தென் பழனியிலே
தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம்
சக்கரக் காவடி சந்தனக் காவடி சேவற் காவடியாம்
சர்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம்
மலையைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
வேலனுக்கு ... அரோகரா
முருகனுக்கு ... அரோகரா
கந்தனுக்கு ... அரோகரா
அதோ வராண்டி பழனி ஆறுமுகன் தாண்டி
அவன் போனா போராண்டி முருகன் தானா வாராண்டி
வேல் இருக்குது ... மயில் இருக்குது ... விராலிமலையிலே
அந்த விராலிமலையிலே
மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம்
விராலி மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம்
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே..