Monday, September 28, 2015

பாடல் எண் : 01
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே.

பாடல் விளக்கம்
குமரப் பெருமானே, முக்தியைப் பெறுவதற்குரிய தவப்பயன் சிறிதேனும் இல்லாத அடியேன், அசுத்தப்படுத்தும் பிரபஞ்சம் என்னும் சேற்றினை விட்டு உய்யுமாறு உண்மையான வழியைக் காட்டியருளினீர்! அடர்ந்த சிவந்த சடையின் மீது கங்கை நதியையும் நாகப் பாம்பினையும் கொன்றை மலரையும் தும்பை மலரையும் சந்திரனது பிறையையும் சூடிக் கொண்டுள்ள சிவபெருமானின் குமாரனாகிய தேவரீர், திருமுருகப் பெருமானாக மட்டுமன்றி, கருணைக்கு உறைவிடமான கிருபாகரனாகவும் விளங்குகின்றீர்.



பாடல் எண் : 02
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.

பாடல் விளக்கம்
தீவினைகளை அழித்து இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் பேரின்ப வீட்டை முக்தியை வழங்க வல்ல கூர்மையான வேலினைத் தாங்கிய திருமுருகப் பெருமானைப் புகழும் திருப்புகழ்ப் பாடல்களை இன்றே மெய்யன்புடன் எழுத்துப் பிழைகள் சிறிது மின்றி கற்றுக் கொள்ளாமல் ஓதாமல் இருக்கின்றீர்களே.! நெருப்பு மூண்டு எரிவதைப் போல கண்களை உருட்டிப் பார்த்துப் புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினால் கழுத்திலே சுருக்குப் போட்டு உங்கள் உயிரைப் பற்றி இழுக்கின்ற அந்த நாளிலா திருப்புகழ்ப் பாடல்களைக் கற்பது (ஓதுவது) இயலும்?.




பாடல் எண் : 03
தேர் அணி இட்டு புரம் எரித்தான் மகன் செம் கையில் வேல்
கூர் அணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்ப்
பேர் அணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே.

பாடல் விளக்கம்
தேரை அலங்கரித்துச் செலுத்தி, "ஆணவம், மாயை, கன்மம்" என்னும் மூன்று கோட்டைகளைத் தம் திருப்பார்வையினாலேயே எரித்து அருளிய சிவபெருமானுடைய திருக்குமாரர் திருமுருகப் பெருமானின் சிவந்த கையில் உள்ள கூர்மையான வேலாயுதத்தால் தைக்கப்பட்ட கிரௌஞ்ச மலையானது அணு அணுவாக துகள் பட்டு அழிந்தது. ஆரம்பத்தில் நேராக அணிவகுத்து வந்து பின்னர் வட்ட வடிவில் வளைந்து கொண்ட அசுரர்களின் சேனை தளர்ந்து ஓடியது. சூரபன்மனுடைய பெரிய நடுச்சேனையும் அழிந்தது. தேவர்கள் வதியும் அமராவதியும் அசுரர்களிடமிருந்து உய்வு பெற்றது.









No comments:

Post a Comment